Thursday, December 8, 2011

அணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்?

பருவமழை நின்றுவிட்டது. முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அணையில் இப்போது இருக்கும் நீரின் அளவும் இறங்கிவந்துவிட்டது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேலும் மேலும் விரிசலாகிக் கொண்டே போகிறது.  


கேரளம் முழுவதும், குறிப்பாக ஆலப்புழை, இடுக்கி, பத்தனம் திட்டை, கோட்டயம், ஆலுவாய் மாவட்டங்களில் தொடர்ந்து பேரணிகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு, பீதி கிளப்பப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தடுக்கப்படுகின்றன. வேண்டுமென்றே அவர்கள் முன்னிலையில் தமிழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பதிலுக்குத் தமிழர்களும் இங்குள்ள கேரள மக்களின் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 


பிரச்னை தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மத்திய அரசு, இந்தப் பிரச்னையில் தலையிட்டு, ஒரு தீர்வு காண முற்படவில்லை.  இந்த அணைக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய பாதுகாப்புப் படையை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இந்தப் பிரச்னையில் மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. 

மத்திய அரசின் நிர்வாக உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு கொடுக்க வேண்டிய நிலை!  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் தொடர்ந்து 10 நாள்களாக நடைபெறாத நிலையில், அந்த சிக்கலைத் தீர்ப்பது குறித்து பிரதமருக்கு அதிக கவலை இருப்பது நியாயம்தான். ஆனால் இரு மாநில உறவுகள் மிக மோசமாகப் போய்க்கொண்டிருப்பது அதைவிட முக்கியமான பிரச்னை அல்லவா? தேசத்தின் ஒற்றுமைக்கே பங்கம் ஏற்படுவதை விடவா, அன்னிய நேரடி முதலீடு முக்கியமாகப் போய்விட்டது?  


இத்தனை நாள்கள் கழித்து மத்திய அரசு கேரள, தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்புகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இருமாநில நீர்வளத்துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்புகிற அளவுக்கு மிக மெதுவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையா இது?  மேலும் இந்தக் கடிதத்திலேயே சிண்டுமுடிகிற வேலையையும் மத்திய அரசு செய்துள்ளது. டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை நடத்தலாம் என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசு ஒரு தேதியை குறித்து, அந்த நாளில் இரு தரப்பும் வாருங்கள் என்று சொல்ல முடியாதா? இரண்டு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி, முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு இல்லையா? தமது பொறுப்பை ஏன் மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது?  நீதிமன்றமும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. 

அணையின் உறுதித்தன்மை குறித்து ஆராய இரு நபர் அடங்கிய வல்லுநர் குழுவை அனுப்ப உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இக்குழு இந்த மாத இறுதியில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தும், பிப்ரவரியில் இக்குழு தனது அறிக்கையை அளிக்கும் என்றால், அதுவரை இரு மாநில மக்களும் கடையடைப்பு, பஸ் எரிப்பு, தாக்குதல் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் குழு பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நாளையே வருவது முடியாத செயலா? 

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு: ""சாவுக்கு வரச்சொன்னா, பாலுக்கு வந்த கதையாக'' அல்லவா இது இருக்கிறது.  நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம் 2002 -இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப் பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 

அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.  1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.  ""அணையின் நீர்உயரத்துக்கும் அணைப் பாதுகாப்புக்கும் தொடர்பில்லை; முல்லைப் பெரியாறு அணையின் நீர் முழுவதையும் இடுக்கி அணை ஏற்கும் திறன் கொண்டது'' என்கிற கேரள அரசின் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, உண்மையைச் சொன்னதற்கு, அந்த அட்டர்னி ஜெனரல் தண்டபாணியை நீக்க வேண்டும் என்கின்றது கேரள எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. இதிலிருந்து என்ன தெரிகிறது? அணை உடைந்தாலும் பாதிப்பு இருக்காது என்பதுதானே? பிறகு ஏன் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்?  

தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள்கள் தடைபட்டால், அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். பால் உள்பட அனைத்து உணவுப் பொருள்களும் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குப் போயாக வேண்டும். நேந்திரம் பழம்கூடத் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குப் போகிறது என்பதுதானே உண்மை? அப்படி ஒரு மோசமான நிலைமையை ஏற்படுத்த கேரள அரசியல்வாதிகள் முற்படுவார்களேயானால், அதற்குக் காரணம் தமிழக அரசல்ல, மத்திய அரசாகத்தான் இருக்கும். 

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல், கேரள சட்டப்பேரவையில் கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது என்று "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு' (சட்டத் திருத்த) மசோதா 2006 என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றியபோதே மத்திய அரசு சட்டத்தின் மேலாண்மையை நிலைநாட்டி இருக்க வேண்டும்.  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி அணை இருக்கவே இருக்கிறது சேதமில்லாமல் பாதுகாக்க. ஆனால், தேச ஒற்றுமை சிதைந்தால் அதை ஆணை போட்டுத் தடுக்க முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இந்த நிலைமை தொடரக் கூடாது! 
 நன்றி  : தினமணி

0 comments:

Post a Comment