Tuesday, January 24, 2012

என் தமிழின் தகவு

பாட்டு எழுதிகிறோம்;

பணம் வருகிறது;

வேறென்ன வேண்டும்?

குறையொன்றுமில்லை, கோவிந்தா!

பிறையும் நானும்

1931 - அக்டோபர் மாதம் 29 - ஆம் தேதி - வியாழக் கிழமை, இரவு எட்டு மணியளவில்-

Octogenarian-வாலி

vaaliஸ்ரீனிவாச வரதனும் நானும், ஸ்ரீரங்கத்தில் கோலி விளையாடியவர்கள்; ‘தோஸ்து படா தோஸ்து’!

STATES-ல் இருப்பவன் சென்னை வந்தான்; ஒரு கல்யாணம்.

கலந்துரையாடினேன்.

“ஹை! வாலி! இப்பவும் பாட்டு எழுதிண்டிருக்கேனு தெரியும். நியூஜெர்ஸீல இருக்கிற நம்ம சீமாச்சுவோட நாலு வயசுப் பொண்ணு - ‘நாங்காய்!செங்காய்!’னு பாடறது! அதெல்லாம் இருக்கட்டும்; Now your are an Octogenarian! எப்படியிருக்கு Life?"

’Octogenarian'- எனும் ஆங்கிலச் சொல்- அகவை எண்பதில் அடியெடுத்து வைத்தோரைக் குறிக்கும்.

ஸ்ரீனிவாச வரதன் என்னைவிட நான்கு வயது சின்னவன்.

அவன் விடுத்த வினாவிற்கு - ஒரு புன்னகையை விடையாய் இறுத்துவிட்டு -

இரவு விருந்து முடிந்ததும், வீடு வந்து சேர்ந்தேன்.

புரண்டு புரண்டு படுத்தும் - துயில் தூர நின்றது, விழிகளோடு விரோதம் பாராட்டிக்கொண்டு.

தத்துவார்த்தமான சிந்தனைகள், என்னைத் தாக்கித் தகர்க்கத் தொடங்கின!

மலையாள

மகாகவி ஒருவன் பாடினான் -

‘மனுஷ்யன் - ஒரு

மா பதம்!’ என்று!

மனிதன் என்பது ஒரு மகத்தான வார்த்தையெனில் - அவ்வார்த்தையே நாளாவட்டத்தில், ஒரு வாக்கியமாய் நீளுகிறது.

மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளியாய் மரணத்தைச் சொன்னால் - முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்.

முதுமை - என் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் ஓராமலில்லை;

எவ்வளவு முக்கியப் புள்ளிகளையும் - முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

முதுமை குறித்துத்தான் எத்துணை விதமான மூதுரைகள்!

’விருத்தம் வந்துவிட்டதே - என

வருத்தம் வரலாமா? ஓ! மானிடனே!

எத்துணை பேர் முதுமையை -

என்னென்று பார்த்திருக்கக் கூடும்?

அதைப் பார்க்கும்

அதிர்ஷ்டம் -

உனக்குக் கிட்டியிருக்கிறதே என

உவகை கொள்!’

- ஆங்கிலக் கவிஞன் ஒருவன் இவ்வணம் அருளியிருக்கிறான்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில், பறங்கியர் ஆட்சியில் -vali1

முன்சீப் வேலை பார்த்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் -

யாத்தருளிய கீர்த்தனைகளில், யானறிந்த ஒன்று - முதுமையின் கையறு நிலையை முழுமையாய்க் காட்டுகிறது.

’ஆசைக் கென்றோர் கறுப்பு

முடியேதும் இலையே;

அய்யய்யோ! கொக்கைப்போல் நரைத்தது தலையே;

காசுக் குதவாத

கிழம் என்பது நிலையே;

கன்னியர்க்கும் இனிநாம்

கசக்கும் வேப் பிலையே!’

- பாட்டில் இதனினும் பட்டாங்காகக் காட்ட முடியுமோ, விருத்தாப்பியத்தின் விளைவுகளை; விசனங்களை?

‘வெள்ளி விழா’ எனும் படத்தில் விசுவநாதன் சார் பாடிய ஒரு பாட்டு; அது, முதுமையைப் பற்றி அடியேன் எழுதியது.

‘கடந்த காலமோ திரும்புவதில்லை;

நிகழ்காலமோ விரும்புவதில்லை;

எதிர்காலமோ அரும்புவதில்லை;

இதுதானே அறுபதின் நிலை!’

- ஆம்; அறுபதிலிருந்துதான் ஆரம்பமாகிறது முதுமை; முதலில், முகத்தில் வரி விழுகிறது - அந்த முக வரிதான், முதுமையின் முகவரி!

அகவை கூடக் கூட, அவஸ்தைகளும் அவலங்களும் அதிகம்.

அஞ்சு பொறிகளும் இருக்கின்றன - அதனதன் இடத்தில்; அஞ்சு புலன்கள்தாம் - அந்தந்தப் பொறி வழியே பெற வேண்டிய பலன்கள் குறைந்து, நலன்கள் கெட்டு நிற்கின்றன.

செவி இருக்கிறது; ஆனால், செவிடாய் இருக்கிறது! விழி இருக்கிறது; ஆனால் விழிக்கிறது - தரையெது தண்ணீரெது எனத் தவித்த துரியோதனன் போல்!

கன்னத்தில் இருந்த குழியைக் காணோம்; தேடினால், கண்ணுக்குள் இருக்கிறது!

பாதம் இருக்கிறது; கூடவே, வாதம் இருக்கிறது!

‘வழுக்கை இருக்கிறதே

வழுக்கை - அது

முடியில் இருந்தால் முதுமை; தேங்காய்

மூடியில் இருந்தால் இளமை!

பாழும் இயற்கைக்கு பாரபட்சம் இருக்கிறதே, என் சொல்ல?

வாரிசுகள் மேல் வைக்கிறோமே பாசம் - அது, வயோதிகத்தில் - படாத பாடுபடுத்தும்.

இதைத்தான் - பட்டுக்கோட்டை பாடி வைத்தான் ‘பாசவலை’ படத்தில் -

‘பாசவலையில் மாட்டிக்கிட்டு -

வவ்வா போலத் துடிக்குது!’ என்று.

பாசம் இருக்கிறதே

பாசம் - அது

குளத்தில் இருந்தாலும் வழுக்கும்;

உளத்தில் இருந்தாலும் வழுக்கும்!

பெரும்பாலும் முதுமை எய்திய பெற்றோர் புலம்புவதுண்டு -

‘என் பிள்ளைகுட்டிகள் என் பேச்சைக் கேட்பதில்லை!” என்று

இவ் வினாவிற்கு - அப்பவே விடை சொல்லிப் போனார் அய்யா திருக்குறள் முனுசாமி அவர்கள்.

‘பெற்றோர்களே! ஒன்றை யோசித்துப் பாருங்கள்; உங்கள் பிள்ளைகள் பிற்பாடு வந்தவர்கள். நீங்கள் பிறக்கும்போதே - உங்களுடன் வந்தவை காலும் கையும்!

வயதாகி விட்டால் - அவைகளே, உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே! வாரிசுகள், கேட்காததில் வியப்பென்ன கிடக்கிறது?!’

- இன்னணம் முனுசாமி அய்யா அவர்கள் எடுத்துரைத்ததைக் கேட்டு, முதியோர் பலர், ஞானம் பெற்றதுண்டு!

அவமானங்களுக்கும் அலட்சியங்களுக்கும் இடையே -

முக்கலும் முனகலுமாய்க் கிடக்குமே முதியோர் வாழ்க்கை என்றுதான் -

ஸ்ரீனிவாச வரதன் என்னைக் கேட்டான் -

‘எண்பது வயதை எட்டிவிட்டாயே; வாழ்க்கை எப்படி இருக்கிறது?’என்று.

கேள்வி நியாயமானதுதான்; ஆனால், அடியேனை முதுமையால் மனம் முறிந்து விடாமல் -

நாளும் போதும் எனைக் காத்து நிற்கும், நண்பர்கள் உடன் இருக்கிறார்கள்; அவர்கள் - உற்றுழியில் உதவும், உடுக்கை இழந்தவன் கைகள்!

வயோதிகம் என்பது வாழ்க்கையின் மாலைப் பொழுது; இந்த மாலைப் பொழுதில், மாலைப் பொழுதைக் கழிப்பதுதான் கஷ்டம்; படப் பாடல்கள் எழுதியது போக - மிச்ச நேரத்தில் பழைய நினைவுகள் என்னைப் பிறாண்டிப் பிடுங்கித் தின்றுவிடாமல் -

என்னை, நதிபோல் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த நண்பர்களே!

‘வெங்கிட்டு’ என் நான் வாஞ்சையுடன் அழைக்கும் திரு. எஸ்.வெங்கடாசலம் - அமரர் திரு. சூர்யாப் பிள்ளையின் அருமந்தப் புதல்வர். என் உடலில் ஈ மொய்க்கும்; அதைக் காணில் வெங்கிட்டு விழியில் தீ மொய்க்கும். பெருந்தனமும் பெரிய மனமும் ஒருசேரப் பெற்ற அவர். என்னிலிருந்து வெளியே நிற்கும் இன்னொரு நான்!

‘கொங்கு நாட்டுத் தங்கம்’ என நான் கொண்டாடும் திரு.வி.கிருஷ்ணகுமார் - அருளாளர் திரு.ஆரெம்வீயால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்; செந்தணல் ஓம்பும் அந்தணர் குலமாயினும் - சகலராலும் சினேகிக்கப்படும் சமரச சன்மார்க்கர்; வாரந்தோறும் என் வாசல் வரும் வசந்தம் அவர்; வெறுங்கையோடு வர மாட்டார்; சாரு நிவேதிதாவையும், நாஞ்சில் நாடனையும், தொ.மு. பரமசிவத்தையும், கலாப்ரியாவையும் சுமந்துகொண்டு வருவார்.

செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்; விளம்பரமில்லாமல் அவர் ஏற்றி வைத்த விளக்குகள் - ஆங்காங்கு எரிந்துகொண்டு இருக்கின்றன.

தொய்ந்து விடாமல் எனைத் தாங்கிப் பிடிப்பது அவரது இரு கை; எனவே, எனக்கு வாலிபம் தருவது அவரது வருகை!

‘தலைவா! தலைவா!’ என்றழைத்து, என்னைத் தழுவி நிற்கும் ஆழ்வார்க்கடியான் மை.பா. நாராயணன் இல்லையேல் -

கட்டுரையும் கவிதையும் இந்த வயதில் நான் எங்கே எழுதுவது? தொலைந்து போன என் இளமையைக் கண்டுபிடித்து என் கையில் கொடுத்தது நாராயணன்தான்!

‘அய்யா! அய்யா!’ என விளித்து அவ்வப்போது என் வீடுவந்து - உற்சாக ஊசிகளை என் உள்ளத்தில் ஏற்றுவது -

கவிஞர் பழநிபாரதியும்; கவிஞர் நெல்லை ஜெயந்தாவும்! இவ் இருவரும், தங்கள் எழுத்துக்களால் தனித்துவம் பெற்றவர்கள். இருப்பினும் - என் எழுத்துப் பதாகையை ஏந்திப் பிடித்து - என்னை ஒரு கைக்குழந்தையாய் தமது கைத்தலத்தே தாங்கி, என் வயது எனக்கே தெரியா வண்ணம் என்னை ‘வாலிப வாலியாகவே வைத்திருக்கிறார்கள்.

கவிஞர்கள் கருத்தொருமித்து ஒரு நேச மாளிகைக்குக் கால்கோள் விழா நிகழ்த்த முடியும் என்று நிரூபித்த -

பழநிபாரதியும் நெல்லை ஜெயந்தாவும் என் இல்லம் வரும்போதெல்லாம் -

முதுமை, என் முதுகை விட்டு இறங்கி, மூலையில் போய் நிற்கிறது!

எஞ்ஞான்றும் என்னை - இளைமையிலேயே இருத்தி வைப்பவர் - என் எழுத்துகளுக்கு எல்லாம் உரைகல்லாய் இருக்கும் கவிஞர் பெருந்தகை திரு.முத்துலிங்கம் அவர்கள்.

கவியரங்கங்களானாலும், பத்திரிகைகளானாலும் -

முத்துலிங்கத்திடம் ஒப்புதல் வாங்காமல் வெளியே விட மாட்டேன், என் கவிதகளை!

முப்பதாண்டுகளுக்கு மேல் கோடம்பாக்கத்தில் கோலோச்சி வரும் - மேனாள் அரசவைக் கவிஞரான திரு.முத்துலிங்கம் -

என் தமிழை நிறுத்து எடை சொல்லும் தராசு!

இத்துணை பேர்களையும் என்னோடு இணைத்தது தெய்வமல்ல;

தெய்வத் தமிழ்!

மூப்படைந்த பின்னும் - முந்தா நாள்

பூப்படைந்த பெண்போல் -

இளமை நலத்தோடு

இருப்பது...

தமிழ் மட்டுமல்ல;

தமிழை மாந்துவோரும்தான்!

அதனால்தான் - பாரதிதாசனார் பாடிவைத்தார் -

‘தமிழுக்கும் அமுதென்று பேர்!’

நன்றி : கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

[மூலம்]

கெடுபிடி கூடாரத்தில் உதயசூரியன் ஒற்றர்கள்?

நமக்கு அவ்வளவா வெவரம் பத்தாதுங்க,