Friday, March 23, 2012

ஈழச்சத்திரியனின் இழிவுச்சரித்திரம்!!-தளபதி ரமேஷ்!!!

நன்நெஞ்சே!

குழவி இறப்பினும்,ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி,வயிற்றுத்தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ,இவ் உலகத்தானே!!!.

சேரமான் கணைக்கால் இரும்பொறையின் இந்த பாடலை தாய்க்கிழவி பாடக்கேட்டுகொண்டிருந்த போது,கங்காணி ஏதோ யோசனையோடு வந்து கொண்டிருந்தான்.அருகில் இருந்த கொக்குவிரட்டி அப்பாடலின் அர்த்தம் என்ன என்று கேட்டான்.
பொறு சொல்கிறேன் என்று வந்து அமர்ந்த கங்காணியிடம் விவரம் கேட்க,அவனும் கூற ஆரம்பித்தான்.

மூன்றாண்டுகளாய் ஏதுமறியா மக்களே  சொல்லொணா இன்னலுறும் போது, இலங்கைப் போரில் சரணடைந்த புலிகளின் கதி என்ன?

அந்த-ஒரு பானை சோற்றுக்கு,பதமான  ஒரு சோற்றுப்பருக்கை-விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ்.

ஈழப்போர் மே 18,2009 இல்  முடிவுக்குவந்ததை நாம் அறிவோம்.

ஆனால், நேரில் கண்டவரின் சாட்சியத்தின் படி,போரின் உச்சகட்டத்தில்,சண்டையிடுவதில் இனியும் பயன்இல்லை என உணர்ந்த ரமேஷ்,மே 17 அன்று தனது மனைவி,குழந்தைகளோடு,வெள்ளை சட்டை,நீளநிறகட்டம்போட்டலுங்கியுடன் நந்திக்கடல் பகுதியைக் கடந்து மக்களோடு,மக்களாக சரணடைந்துள்ளார்.



ஆனால் மறுமுனையில் இலங்கை ராணுவம் இவரை அடையாளம் கண்டு கைதுசெய்தது.
3,00,000பேரோடு இவரையும் வாவுனியா தடுப்பு முகாமுக்கு செல்லப்பட்டுள்ளார்.
அங்கும் அதே வெள்ளை சட்டை,நீளநிறகட்டம்போட்டலுங்கியுடனே காணப்பட்டுள்ளார்,ஆனால் மற்றைய விடுதலைப்புலிகளிடமிருந்து தனிமைப்படுத்தபட்டுள்ளார்.
இவ்வாறு அந்த சாட்சியம் கூறுகிறது என்று ஆதாரத்தையும் காட்டினான்.

சவேந்திர சில்வா!--@%$$%#^#%$$#&%%$@%$%^&%#$#%$&$*%$&#^*%#!

 ஆனால் தளபதி ரமேஷின் மனைவியோ,புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே 18, 2009 அன்று,இலங்கை ராணுவ 58ஆம் பிரிவு படைத்தளபதியான சவேந்திர சில்வா ஐ.நா மனிதஉரிமைச்சட்டத்தின் படி,வஞ்சகத்தோடு வெள்ளைக்கொடியுடன் சரணடையுமாறு கூறியதாகவும்,அவ்வாறே தளபதி ரமேஷும் சரணடைந்ததாக கூறுகிறார்.அதற்கு ஆதாரம் இதோ என்று மற்றொரு இணைப்பையும் காட்டினான் கங்காணி.

இதுல எத நம்புறது?னு கேட்டான் பச்சிலைபுடுங்கி.
ஆதாரங்களை காட்டிவிட்டோம்,இதில் சரி எது நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்! என்றான் கங்காணி.


பிறகு ஒரு சமீபத்தில் வெளியான விழியத்தைகாட்டி,அதில் நடப்பவைகளை விவரித்தான் கங்காணி.

விழியத்தில் விரிபவை:

இந்த விழியத்தில் படங்கள்,படைவீரர்களின் கவச ஊர்தியிலும்,மண்குடிசைப் பகுதியிலும் நிகழ்வதுபோல் காட்டுகிறது.
முதலில் வெள்ளை சட்டை,நீளநிறகட்டம்போட்டலுங்கியுடன் இருப்பவர்,பிறகு சட்டையின்றி விடுதலைப்புலிகளின் சீருடை பேன்ட் மட்டும் அணிந்தவரை,சிங்கள ராணுவச் சீருடை அணியுமாறு கட்டாயப்படுத்தி உடுத்தவைக்கிறார்கள்.



விசாரணை:
இலங்கை ராணுவ வீரன் ஒருவன் ரமேஷிடம் விசாரணை நடத்துகிறார்.
அதில்,
தளபதி ரமேஷ் முதுகில் ஒரு 1988 இல் ஏற்பட்ட தழும்பும்,சமீபத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட ஒரு Plaster ஒட்டப்பட்ட புண்ணும் காட்டப்படுகிறது.அந்த பிளாஸ்டரும் தற்போது ஒட்டப்பட்டது போலுள்ளது.



அந்த புண் மற்றும் 1988ஆம் ஆண்டுத் தழும்பு!

அடுத்து,
அவர் பிறந்த தேதி,
விடுதலைப்புலிகளோடு சேர்ந்த ஆண்டு,
மனைவி,மக்களின் பெயர்கள்,அவர்களின் இருப்பிடம் பற்றியெல்லாம் கேட்கப்படுகிறது.

அனைத்திற்கும்,முறையே
18.8.1964 (பிறந்த தேதி),
பட்டிகோல (பிறப்பிடம்)



ஆகஸ்ட் 1986 (LTTEஇல் சேர்ந்தது)
வத்சலா  தேவி (மனைவி),மேலிஹா 9வயது ,பிரதாபன் 7வயது,கலைச்சுடர் 2வயது-(குழந்தைகள்),இருப்பிடம்-வவுனியா முகாம்.

என்று பதிலும் கூறுகிறார் தளபதி ரமேஷ்.

அந்த சமயத்தில்,பட்டிகோலா பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றினாலும்,மறைமுகத் தாக்குதல் நடத்தும் தன்னுடைய புலி சகாக்கள்,குமரன் ,தயமோகன் பெயர்களை கூறுகிறார்.

அந்த விழியத்தின் இறுதி  34வினாடிகளில் ,அவர் முகம் அச்சத்தில் உறைந்து போய்யுள்ளதே.உதடுகளைக் கூட நனைகிறாரே பார்த்தீர்களா? என்று இடையில் மறித்துக் கேட்டான் கொக்குவிரட்டி.ஆம் என்பது போல் தலையசைத்துவிட்டு மேலும் தொடர்ந்தான் கங்காணி.

2006இல் தொப்பிகல யுத்தத்தில் நீ சண்டையிட்டாய் அல்லவா?அது எனக்குத்தெரியும்,நானும் அப்போது அங்குதான் இருந்தேன் என்கிறார் விசாரணை அதிகாரி.
முதலில் விசாரணைத் தொடங்கும் போது,பயப்படாதே,நாங்கள் உன்னை ஒன்றும் செய்யமாட்டோம்,எங்களுக்கு சில மாத்திரம் தேவை.இங்கு ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்கள்.நீ பாதுகாப்பாக உள்ளாய் என்று கூறப்பட்டது.

(பல போர்களை பார்த்த ஒரு மூத்த படைதளபதிக்கு,இந்த மாதிரி எதிரி ராணுவம் சொல்லுவது பொய் என்று தெரியாமலா இருந்திருக்கும் என்று பச்சிலைப்புடுங்கியின் காதுகளில் மெல்லச் சொன்னான் கொக்குவிரட்டி.)

ஆனால், ஒரு கட்டத்தில் பொய் சொல்லாதே என்று கேள்விகேட்பவர் கோபிக்க,எனக்குப் புரிகிறது சார்,எனக்குப் புரிகிறது சார் என்று மிகவும் அஞ்சி,அதிகாரியை சாந்தப்படுத்துகிறார்.


எனக்குப் புரிகிறது சார்,எனக்குப் புரிகிறது சார்-தளபதி ரமேஷ்
அதோடு விழியம் முடிகிறது,என்று ஆதாரங்களையெல்லாம் காட்டிவிட்டு,தான் யோசித்துக்கொண்டு வந்ததையெல்லாம் கொட்டி விட்ட திருப்தியில்,போய் அமர்ந்தான் கங்காணி.

அப்போது காட்டுச்சிறுக்கி சிலபடங்களோடு அருகில் வந்து காண்பித்தாள்,பிறகு மேலும் அவளே தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்,
அந்த விசாரணைக்குப் பின்னர் அவர் முகத்தில் ரத்தம் வழிய இறந்து கிடப்பதும்.அதை ஒரு ராணுவ வீரன் எரிப்பது போன்றும் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.
சுடப்பட்டக் காயத்தைப் பார்க்கும் போது,தலையின் ஒரு பக்கத்தில் பெரியதுளை கொண்ட துப்பாகியால் சுடப்பட்டிருக்க வேண்டும் என தடயவியலாளர்கள் கருதுகின்றனர்.

விசாரணை அதிகாரி, தளபதி ரமேஷிடம் எப்போது இங்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு,மே 17,அதிகாலை 4.30 மணிக்கு என்று  கூறுகிறார்.தடவியல் ஆய்வுகள், இந்த விழியம் அலைபேசியில் இருந்து கணினிக்கு மே22 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.ஆக,ஐந்து நாள் ரானுவக்கட்டுப்பாட்டில் தளபதி ரமேஷ் இருந்தது உறுதியாகிறது.மேலும் அவர் மே 22அன்றே கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் நம்பப்படுகிறது.

அந்த பிஞ்சு நெஞ்சில் சுட்டவனின் "____" அறுத்து காக்காய்க்கு போட்டால் தான் என்ன?
மேலும், ஒருசமயத்தில்,உன் தலைவன் (பிரபாகரன்) மனைவியை இங்கே நந்திக்கடல் பகுதியில் பார்த்தாயா? என்றும்,
உன் தலைவன் மகள் எங்கே ?என்றும் விசாரணை அதிகாரி கேட்கிறான்.
இதன் மூலம் தளபதி ரமேஷ்,நந்திக்கடல் பகுதியில் விசாரிக்கப்பட்டு,பிறகு அங்கேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது என்று கங்காணி காண்பித்த விழியத்தோடு,புதிய புகைப்படங்களைக் காட்டி,தடயவியலாளர்களின் கருத்துக்களையும் அடுக்கி சொன்னாள்,காட்டுச்சிறுக்கி.



(மிகவும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட தளபதி ரமேஷின்  சில புகைப்படங்கள்  மனதை பாதிக்கும் வகையில் இருப்பதால்,இப்பதிவில் வெளியிடாது தேன்மழையின் ஒளிச்சோலையில்,தளபதி ரமேஷின் விசாரணை விழியத்தோடு வெளியிடப்படுகிறது-தேன்மழையின் ஒளிச்சோலை இணைப்பு)

கொக்குவிரட்டியும்,பச்சிலைப்புடுங்கியும் அந்த படங்களைப்பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயினர்.

ஆக,மேற்சொன்ன விவரங்களின் படி,மே 22ஆம் தேதி,நந்திகடல் பகுதியில்,பெரிய துளை கொண்ட துப்பாக்கியின் மூலம் தலையின் ஒரு பக்கத்தில் சுடப்பட்டுக்கொல்லப்பட்டுள்ளார்,தளபதி ரமேஷ்.

எப்பேர்ப்பட்ட சத்திரியனுக்கு வந்த இழிவுச் சாவு இது!

இதற்கு அவன், உறுதி முழக்கமும் குருதிப்புனலும் இறுதிப்பயணமும் எங்கும் நிறைந்த போர்க்களத்திலேயே மாண்டிருக்கலாமே!

"பிள்ளையொன்று இறந்து பிறக்கினும்-சதைப்
பிண்டமொன்று  பிறந்து தொலைக்கினும்

மூப்புகொண்டு மடிந்திடினும்
முடிவில் ஒரு நோய்கண்டு முடிந்திடினும்
போரில் கலந்து விழுப்புண் பெற்று-மானமிகு
வீரர்  என மாண்டிடாத பழிதுடைப்பதற்கே

வாள்கொண்டு உடலில் கீறி-
வான்புகழ்;வாழ்வில் சேர்த்த பின்பே

உடலடக்கம் செய்திடும் மானமரபே!
அடலேறுகள் மலிந்திடும் தமிழர்மரபு!!!!.

அந்த
பண்பாட்டு மரபு வழி வந்துதித்தநானோ-மனப்
புண்பட்டு பகைஅரசின் சிறைப்பட்டு நாய்போல

தண்ணீர்க்கும் காத்திருக்கலானேன்-இனி
உண்ணீர் என்று பன்னீர் தந்து உபசரித்தபோதும்

தகுதிஎன்று உயிர்வாழ்தல் -அதனாலே
தமிழ்த்தாயே !என் மானங்காக்க

உன் மடிதனிலே விழுகின்றேன்
தாங்கிக் கொள்க!!"
என்று போரில் பகைவனிடம் சிக்கி வடக்கிருந்து உயிர்நீத்த சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வரலாற்றை மரபணுவில் சுமந்த ஒரு படைத்தளபதிக்கோ இந்நிலை!



மயிர்நீப்பின் வாழாக்கவரிமான் போல்
மானம்வரின் உயிர்நீப்பர் எனும் குறளுக்கு விலக்காகிப் போனாரோ தமிழ்ப்புலித் தளபதி ரமேஷ் என்கிற துரைராஜசிங்கம்??.


அது சரி ,
போரில் சரணடைவோரை இப்படி கொல்வது காட்டுமிராண்டிகளுக்கு சரி,நாகரீமடைந்த மனிதசமூகத்துக்கு எப்படி முறையாகும்????.

சமீபத்தில் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் கூட பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் எனும் பாலகன் கொல்லப்பட்ட விதம் குறித்துக் கூறப்பட்டதே,அந்த கொலைக்கும்,இதற்கும் உள்ள வேறுபாடு,தளபதி ரமேஷ் சமாதானம்விரும்பி,சரணடைந்து,ராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆனால், பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!! என்று சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட பாலகனுக்கு இவை எதுவும் இல்லாமல் நேரடியாக கொலை.

ஏ! பாரதி பாதகம் செய்வோர் முகத்தில் நீஏன் காரி உமிழச்சொன்னாய்!
துப்பாக்கியிலிருந்து தோட்டவை உமிழச்சொல்லியிருக்கலாமே

திரைகடலோடி திரவியம் தேடிய தமிழினம்,
இன்று திக்குமுக்கு இல்லாமல் திரணியைத் தேடிக்கொண்டுள்ளதே!!!



காம்புவழியே காமப்பாலை மட்டும் குடித்த காட்டுப்பன்றியின் கரங்களில்
கற்பியல் நெறிகாட்டும் கண்ணகியரும்!!,பால்மணம் குறையா பாலகரும்!!!
ஐயகோ,எம் தமிழன்னையே இந்த இழிவுகள் எல்லாம் உனக்கா?எமக்கா?

நீதியே,நீயும் இருக்கின்றாயா???
அல்லது நீயும் அந்த கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?




போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகின்றன.குற்றுயிரும்,குலைவுயிருமாய் கிடந்த ஈழ மண்ணுக்கு முதலுதவியாக மருந்திட வந்துள்ளது உலக நாட்டாமைகாரன் அமெரிக்காவின் நேற்றைய வெற்றியடைந்த ஐ.நா தீர்மானம்.அதில் வியப்பான விஷயம் சே குவாரா,பிடல் காஸ்ட்ரோ போன்ற பல போராளிகளால் பிறந்த கியூபா நாடு இத்தீர்மானத்தை எதிர்த்தது.அமெரிக்காவின் காத்தைக்கூட நாட்டுக்குள்ளே அனுமதிக்காத கியூபா, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்பதற்காகவே இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளது.

இலங்கைக்கு எதிரான,அமெரிக்க தீர்மானம் வெற்றி!.ஹிலாரியா கொக்கா!!!!!!


அறிஞர்கள் பலரும் கூறுவது,
மயிலிறகால் வருடுவதாய் இத்தீர்மானம் இப்போது இருப்பினும்,இலங்கை நிச்சயம் அந்த LLRC ஐ இந்த ஒரு வருடத்தில் நிறைவேற்றுவது கடினம்.அவ்வாறு நிறைவேற்றாமல் போகும் போது,உலக நாடுகளிடமிருந்து,ஐ.நா மனிதஉரிமை ஆணையம்,ஐ.நா பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றில் இருந்து மிகவும் விபரீதமான விளைவுகளை சந்திக்கும்.

அதுமட்டுமல்ல,யாரையுமே அனுமதிக்காத இலங்கை,இப்போது ஐ.நா மன்றத்தினரை நுழைய அனுமதித்தே ஆகவேண்டும்.

ஆக,மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கில்  மறைந்த சூரியனின் கிரணங்கள் இப்போது இலங்கையின் கிழக்கில் தெரிய ஆரம்பித்துள்ளது.
அக்கீற்றுகள் தாமதிக்காமல் ஈழ வாழ்வில்  பிரகாசமாக வேண்டும் என்பதே இப்பஞ்சாயத்தின் வேண்டுகோள்.

இவ்விடத்தில் நம் தேன்மழைத்தோழர்கள் அடிக்கடி கூறுவதைச் சொன்னால்,பொருத்தமாக இருக்கும்,

"உண்மை தாமதமாக வந்தாலும்....நிச்சயம் வரும்!!!"

தாய்க்கிழவியின் அந்த பாட்டுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டவனாய், மௌனமாக நடக்கஆரம்பித்தான் கொக்குவிரட்டி.

1 comments: